Wednesday, May 27, 2009

ம்மாஆஆஆஆஆ

கொஞ்சியவர்கள் (3)
நிலாவோட ஆயாவும் தாத்தாவும் இப்போ சவுதி வந்திருக்காங்க, அதனால நிலாவோட அம்மா ரொம்பவே பிஸி ஆகிட்டாங்க. நிலாவைப் பத்தி எழுதக் கூட நேரம் இல்லை. குட்டிநிலாவுக்கு வேற பாவம் நடுவிலே காய்ச்சல். இப்போ தான் ஒகே ஆனாங்க. அதனால வலைப்பதிவு பக்கம் வரவே முடியல, அதுக்குள்ளே நிலாவைப் பத்தி எழுதறதுக்கும் கொஞ்சம் விஷயங்கள் கிடைச்சிருக்கு:

  • நிலாவுக்கு காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடி தான் "ம்மா" சொல்ல ஆரம்பிச்சாங்க. காய்ச்சல் வந்ததும் "அம்மே அம்மே"ன்னு நிறைய முறை கூப்பிட்டதைப் பார்க்கும்போது பாவமா இருந்துச்சு (சோகத்திலும் சுகம்)


  • குட்டிநிலா இப்போ சூப்பரா பை சொல்லக் கத்துக்கிட்டாங்க. அவங்க பை சொல்ற அழகே தனி தான். அவங்க குட்டி கையை அழகா அவங்க முகத்துக்கு நேரா திருப்பி வச்சுக்கிட்டு வேகமா கைய அசைச்சு அவங்களுக்கே அவங்க சூப்பரா சொல்லிக்கிறாங்க (எனக்கு என்னமோ அவங்க பை சொல்றது மட்டும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிக்கும்)


  • எப்போவாச்சும் நிலா சாப்பிடாம அடம் பிடிக்கும்போதெல்லாம் "நிலா அம்மாவுக்கு வேணாம் போ"ன்னு விளையாட்டா நான் சொல்ல ஆரம்பிச்சதுல இப்போ மேடம் எது சாப்பிடக் கொடுத்தாலும் "னாணாம் னாணாம்"ன்னு அழகாச் சொல்றாங்க (இனிமே அம்மா னாணாம் சொல்ல மாட்டேன் ஸாரி நிலா).


  • முன்னாடில்லாம் "ஷேக் ஹேண்ட்ஸ் நிலா" சொல்லிக் கொடுப்பேன். அப்போல்லாம் செய்ய மாட்டாங்க, இப்போ நாலு நாலா நிலா எல்லோருக்கும் சூப்பரா கை கொடுக்கிறாங்க. (ஆரம்பிச்சுட்டா டா ட்ரைனிங் செஸன்னு தயவு செய்து யாரும் என்னை திட்டாதிங்கஅஅஅஅ)


  • நிலா இப்போ நாம செய்றது பேசறதெல்லாம் ரொம்பவே கவனிக்க ஆரம்பிச்சுட்டா. ஒரு நாள் ஒரு காமெடி நடந்துச்சு. அவங்க தாத்தா சோஃபால படுத்துக் குறட்டை விட்டு தூங்கிட்டு இருந்தாங்க. நிலா கீழ உட்கார்ந்துகிட்டு அவங்கள ரொம்ப நேரமா உத்துப் பார்த்துக்கிட்டே இருந்தா. எதுக்காக அப்படி பார்க்கிறான்னு எனக்கும் என் கணவருக்கும் ஒண்ணும் புரியல. நாங்களும் பெருசா கண்டுக்கல. கொஞ்ச நேரம் கழிச்சு பார்த்தா அவங்க தாத்தா மாதிரியே உதட்டை வச்சுக்கிட்டு குறட்டை விட்டு காமிக்கிறாங்க. எங்க ரெண்டு பேருக்கும் சிரிப்பு தாங்க முடியலை. (ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் போல)


  • நிலாவோட அப்பாவுக்கு பிறந்தநாள் வர்றதால "ஹேப்பி பர்த்டே டூ யூ" பாட்டை கை தட்டிப் பாடிச் சொல்லிக் கொடுத்தேன். அவளும் "ஹேப்பி பர்த்டே டூ யூ" பாடினா போதும், உடனே கை தட்ட ஆரம்பிச்சிடுவா. அப்புறம் முடிஞ்ச உடனே கை கொடுக்கணும்ன்னு சொல்லிக் கொடுத்தேன். நிலாவும் சூப்பரா செய்ய ஆரம்பிச்சுட்டா. அநேகமா இந்த முறை அவங்க அப்பாவுக்கு இது தான் பெரிய பர்த்டே கிஃப்ட்டா இருக்கும்ன்னு நினைக்கிறேன் (இந்த ஊர்ல பெண்கள் தனியா போய் கிஃப்ட்டும் வாங்க முடியாது. அப்படியும் என் நண்பர்கள் மூலமா ரெண்டு முறை வாங்கி கொடுத்திருக்கேன். இந்த முறை வெளில போக முடியாததால சீப் & பெஸ்ட் கிஃப்ட்:-) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)


  • நிலாவோட அப்பாகிட்டே ஒரு நாள் "நான் தான் புள்ளைக்கு புதுசா எதுனா சொல்லித் தர்றேன். நீ(ங்க) எதுவும் சொல்லித் தர மாட்டிங்களான்னு கேட்ட உடனே அவர் "நான் தான் அவளுக்கு பிச்சு பிச்சு சொல்லிக் கொடுத்திருக்கேனே"ன்னு சொன்னார். ஆமாம், நிலாவை யாராச்சும் எதுனா திட்டினா அவ திருப்பி "பிச்சு பிச்சு"ன்னு ஆள்காட்டி விரலால காமிக்க ஆரம்பிச்சுட்டா. அவர் சும்மா ஸ்டார்ட் பண்ணி விட்டார். ஆனா நம்ம தான் அதையும் முறையா சொல்லிக் கொடுத்தோம்ல (நம்ம எதுனா கோபமா சொன்னா மேடம் நமக்கே பிச்சு பிச்சுங்கிறாங்க, ஒண்ணும் பண்ண முடியல)


இந்த இருபது நாள்ல நிலா கிட்டே எவ்ளோ மாற்றங்கள்ன்னு நீங்க எல்லாம் ஆச்சர்யப்படுறது புரியுது. சில விஷயங்கள் அவளுக்கு முன்னாடியே தெரியும், பை சொல்றது, ஷேக் ஹேண்ட்ஸ் கொடுக்கறதெல்லாம். ஆனா திடீர்ன்னு தான் அவ இதெல்லாம் ஒழுங்கா செய்ய ஆரம்பிச்சா. உண்மையிலேயே ஒன்பது மாசம் முடிஞ்சதுக்கு அப்புறம் நிலா கிட்டே நிறைய மாற்றங்கள். அதெல்லாம் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு, ஒரு வித்தியாசமான அனுபவமாவும் இருக்கு.

Tuesday, May 5, 2009

மரூன் கலரு ஜிங்குச்சான்

கொஞ்சியவர்கள் (7)
நிலாவைப் பற்றிய ஒரு முக்கியமான அழகான குட்டியான விஷயத்தை நான் பதிவுல போடவே மறந்துட்டேன். அதை நினைவுபடுத்திய என் கணவருக்கு நன்றி. பொதுவாவே பெண் குழந்தைகளுக்கு தான் விதம் விதமா ஆடைகள் கிடைக்குது. ஃப்ராக், மிடி, ஸ்கர்ட் & டாப், ஜீன்ஸ் & டாப், காக்ரா ச்சோளி, ஷராரா இப்படி ஏகப்பட்ட வகைகள். எவ்ளோ தான் புதுசு புதுசா உடைகள் வந்தாலும் நம்ம பாரம்பரிய பட்டுக்கு தனி மவுசு தான். அதுவும் பெண் குழந்தைகளுக்கு பட்டுப் பாவாடை கட்டினாலே ஒரு தனி அழகு வந்துடும்.

நிலாவோட முதல் பிறந்த நாளுக்காக முன்கூட்டியே பட்டுப்பாவாடை சட்டை ஊர்லேயே எடுத்துத் தைக்கலாம்ன்னு நான், என் நாத்தனார், மாமியாரோட நிலாவையும் கூட்டிக்கிட்டு நல்லிக்குப் போயிருந்தோம். அப்போ நிலாவுக்கு ஐந்து மாசம் தான் முடிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். கடைக்காரர் எல்லா சட்டைகளையும் ஒண்ணு ஒண்ணா எடுத்துப் போட்டுக் காமிச்சுட்டு இருந்தார். அதிலே எங்களுக்கு ரெண்டு சட்டை ரொம்ப பிடிச்சிருந்துச்சு. ஒண்ணு பச்சை கலர், இன்னொண்ணு மரூன் கலர். அப்போ தான் என் மாமியார் "பேசாம இது ரெண்டுத்துல நிலாவையே ஒண்ணு செலக்ட் பண்ணச் சொல்லுவோம்"ன்னு ஒரு யோசனைச் சொன்னாங்க. அதுவும் நல்ல ஐடியா தான்னு சொல்லி அவ கிட்டே காமிச்சோம். அவ அழகா அவளோட குட்டி கையால மரூன் கலரைத் தொட்டா. சரி, பளிச்ன்னு இருக்குன்னு செலக்ட் பண்றா போலன்னு நினைச்சுக்கிட்டேன். அப்புறம் கடைக்காரர் வேற கலர் சட்டைய காமிங்கன்னு அவரா ஒண்ணு எடுத்துக் கொடுத்தார். அப்பவும் அந்த மரூன் கலரை தான் தொட்டாங்க. திரும்ப இன்னும் ரெண்டு ட்ரஸோட சேர்த்துக் காட்டினோம். அப்பவும் மரூன் கலர் தான். எனக்கோ ஆச்சர்யம். சரி, அவ பக்கத்திலே மரூன் சட்டை இருக்கிறதால தான் அதை சுலபமா செலக்ட் பண்றா போலன்னு வேற மாதிரி மாத்திக் காட்டினோம். என் மாமியார் ரெண்டு கலர் சட்டைகளும், என் நாத்தனார் ரெண்டு கலர் சட்டைகளையும் கையிலே எடுத்து வச்சிக்கிட்டு மரூனை அவ கைக்கு கொஞ்சம் எட்டாத மாதிரி தள்ளி வச்சு காட்டினோம். அப்பவும் அவங்க ரெண்டு கையையும் அழகா கொண்டு போய் அதே மரூன் சட்டையிலே வச்சாங்க.

குழந்தைங்க வாக்கு தெய்வ வாக்கு மாதிரின்னு சொல்வாங்கன்னு கடைக்காரர் ஆச்சர்யப்பட்டுச் சொல்லவும், நாங்களும் கொஞ்சம் ஆச்சர்யத்தோடயே அவ செலக்ட் பண்ண அதே சட்டைய வாங்கிட்டு வந்துட்டோம். நிலா அதிர்ஷ்டக்காரங்க தான் ஐந்து மாசம் இருக்கும் போதே அவங்க சட்டையை அவங்க விருப்பப்படி எடுக்குறாங்க நானெல்லாம் காலேஜ் போற வரைக்கும் என் விருப்பப்படி சட்டை எடுத்ததே இல்லை ஹும்ம்ம்ம்..... சரி குட்டி நிலாவோட சட்டையை பார்ப்போமா?

 

Designed by Ipiet | All Image Presented by Tadpole's Notez