Sunday, December 27, 2009

நாட்டி நிலா

கொஞ்சியவர்கள் (24)
நிலாவைப் பற்றி யாராவது விசாரித்தாலே நான் சொல்லும் பதில் “நாளுக்கு நாள் வாலுத்தனம் அதிகம் ஆகிட்டு இருக்கு” என்பதாகவே இருக்கும். அவளது ஒவ்வொரு வாலுத்தனத்தையும் ரசிக்கும் முதல் ஆளாக நான் இருக்கேன். அம்மா தானே முதல்ல ரசிப்பாங்க, அதெப்படி அப்பா சொல்லிக்க முடியும்? சில நேரத்திலே நிலாவோட வாலுத்தனத்துக்கு அவங்க அம்மா டென்ஷன் ஆகுறாங்களே, அதனால அந்தப் பதவியை நானே எடுத்துக்கிட்டேன் (எப்பூடீஈஈ?). வீட்டில யாரும் ஃபோன் பேச முடியாது, இவங்க கைல ஃபோனைக் கொடுத்திடணும். இவங்க வாங்கி “ஹலோ, மம்மம் சாப்டியா” என்றெல்லாம் பொறுப்பா விசாரிப்பாங்க. மத்தவங்க மம்மம் சாப்பிட்டாங்களேன்னு விசாரிக்கிறியே, நீ ஒழுங்கா சாப்பிடுறியான்னு கேட்டா, அதுக்கு மட்டும் அழகா “வேணாம்மா” “வேணாம்ப்பா” சொல்லக் கத்துக்கிட்டாங்க.

அம்மாக்காரங்க புள்ளைக்கிட்டே டென்ஷன் ஆனாலோ சின்னதா அடிச்சாலோ (டையப்பரில் தான்) நமக்கு டென்ஷன் ஆகும். அதனாலேயே சில நேரத்திலே எங்களுக்குள்ள வாக்குவாதம் நடக்கும். ஆனா, கொஞ்ச நேரத்திலே அம்மாவும் பொண்ணும் இழைஞ்சுக்கறதைப் பார்த்தா “அடப்பாவிகளா, இதுக்காகவா நான் என்னோட எனர்ஜிய வேஸ்ட் பண்ணேன்”னு நினைக்கத் தோணும். நான் நிலா கிட்டே டென்ஷன் ஆக மாட்டேன், ஆனா அவ எதாவது தப்பு செய்யிறான்னா கொஞ்சம் மிரட்டுற மாதிரி பார்ப்பேன். உடனே மேடம் “ராஜாப்பா”ன்னு வந்து கட்டி பிடிச்சுப்பாங்க. அப்போ மட்டும் கேக்காமலே முத்தமெல்லாம் கிடைக்கும். அதுக்கு மேல எங்கேர்ந்து டென்ஷன் ஆகுறது? டென்ஷனெல்லாம் புஸ் ஆகி “இந்தக் கன்னத்துல” என்று மறுகண்ணத்தையும் காட்டி முத்தம் வாங்கிப்பேன். கூடவே “ஐ லவ் யூ” சொல்லுன்னு சொல்லி அவங்க பாஷைல ஒரு “ஐ லல் ல்லூ”வும் வாங்கிப்பேன்.

நைட்டுல எவ்ளோ நேரமானாலும் அவங்களா டயர்ட் ஆனா தான் தூங்க வைக்க முடியும். அதுவும் வெளிச்சத்தம் எதுவும் இல்லாம இருக்கணும், அநாவசிய வெளிச்சம் இருக்கக்கூடாது. “நிலா தூங்குடா” என்று சொன்னதுமே நல்லப்பிள்ளையா போய் பெட்டுல படுத்து தனக்குத் தானே “ரோரோ” தட்டிப்பாங்க. அட இப்படி ஒரு நல்லப்பிள்ளையான்னு ஆச்சர்யப்படுறிங்களா? அதான் இல்ல. அடுத்த செகண்டே எழுந்து உட்கார்ந்துப்பாங்க. அப்போ படுத்தது? அது நாம சொல்றதைக் கேட்டு நடந்துக்கிறாங்களாம். சரி அப்பாவும் தூங்குறேன் நிலாவும் தூங்கிடுங்கன்னு சொல்லிட்டுப் படுத்தா, அடுத்த நிமிஷம் வயித்து மேல ஏறி உட்கார்ந்துகிட்டு குதிரை ஓட்ட ஆரம்பிச்சிடுவாங்க. அதுவும் இப்போ எஜிப்ட் போய்ட்டு வந்ததுலேர்ந்து குதிரை சத்தத்தோட ஓடுது (அங்கே குதிரை வண்டில போனதுல இருந்து இப்போ குதிரை சத்தமும் போட ஆரம்பிச்சாச்சு)

அம்மாவும் பொண்ணும் மட்டுமா பகல் முழுக்க இருக்கிறதால அப்பப்போ கோமதி எதாவது புதுசு புதுசா சொல்லித் தர்றதா இருக்காங்க. இப்போ கொஞ்சம் கொஞ்சமா தமிழ், இங்க்லீஷ் ரைம்ஸ்ல ஒவ்வொரு வரியிலேயும் அவங்க பாதி சொல்ல நாம மீதி முடிக்கிற நிலைமைல இருக்கு. இல்லைன்னா நாம எடுத்துக்கொடுக்க அவங்க முடிக்கிற மாதிரி. நான் தான் பொண்ணுக்கு எல்லாம் சொல்லித் தர்றேன், நீ எதுவுமே சொல்லித் தர்றது இல்லைன்னு கோமதி என்கிட்டே குறை சொல்லாத நாளே இல்ல. சரி நம்மால முடிஞ்ச நல்ல காரியம் செய்வோம்ன்னு ஒரு நாள் நிலா அழறான்னு தூக்கி வச்சிக்கிட்டு “என்னம்மா பண்ணலாம், டிஸ்கோவுக்குப் போகலாம். வோட்காவப் போடலாம் ஓடிப்பாடி ஆடலாம்”ன்னு பாடினேன். இப்போ எம்பொண்ணு “டுமீலு டுமிலு”ன்னு நான் பாடினாலோ டிவியில் அந்தப் பாட்டின் வரி வந்தாலோ “டுமாங் டுமாங் ங்கொய்யா” என்று பாடுகிறாள்.

போன வாரம் நிலா மேடம் சென்னை போய்ட்டாங்க. அங்கே எல்லோர் கிட்டேயும் நல்லா ஒட்டிக்கிட்டாங்களாம். ஆனா, மேய்க்கிறது தான் பெரிய கஷ்டமா இருக்காம். வீட்டுலேயே சின்னப்பையன் என் மச்சான், அவனாலேயே முடியலையாம். அப்போ பெரியவங்க நிலைமை? ரகளை தான். அங்கே அவங்களுக்கு மனோ தாத்தா, பாட்டி, தாத்தா, ஆயா, மாமா, மாமி, அத்தை, அத்தாச்சி, அக்கம்பக்கம் ஆண்டீஸ், மாமாஸ்ல்லாம் நிறைய பேரு இருக்காங்க. ஆனா, இங்கே அப்பாவுக்கு? ஐ மிஸ் யூ டா குட்டிம்மா.
 

Designed by Ipiet | All Image Presented by Tadpole's Notez